tamilnadu

img

இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை - மத்திய நிதி அமைச்சகம்

2018-19ஆம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”2018-19ஆம் நிதியாண்டின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இதற்கு தனிநபர் நுகர்வு குறைந்து, எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் சிறிதளவே நிலையான முதலீடுகள் அதிகரித்துள்ளதும், ஏற்றுமதியில் போதுமான வளர்ச்சி இல்லை. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததால், சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்து நாட்டின் முதலீடுகளில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் ஏற்றுமதி அதிகரித்தால், வரும் காலங்களில் இந்தியப் பொருளாதாரம் இன்னும் வேகமாக வளரும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டில் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து 7.6 சதவீதத்தை எட்டியுள்ளது என்று மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து, மத்திய புள்ளியியல் அலுவலகமும், 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


;